தமிழ்நாட்டில் புதிதாக 4,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே 10 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு ஏற்படவில்லை.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக 5 ஆயிரத்துக்கும் கீழாக பாதிப்பு குறைந்து வருகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 4,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 776 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 4 ஆயிரத்து 506 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 79 ஆயிரத்து 696 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றில் இருந்து 5 ஆயிரத்து 537 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 24 லட்சத்து 08 ஆயிரத்து 886 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில், 113 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 619 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் புதிதாக 257 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 428 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஈரோட்டில் 420 பேருக்கும் சேலத்தில் 295 பேருக்கும் கோவையில் 514 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதியாகி இருக்கிறது. குறைந்த பட்சமாக ராமநாதபுரத்தில் 14 பேருக்கும் பெரம்பலூரில் 22 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி, கரூர், நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உயிரிழப்பு ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.







