அழிக்கப்பட்ட 14,232 லிட்டர் சாராய ஊறல்கள்!

இதுவரை 14,232 லிட்டர் சாராய ஊறல்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.   கொரோனா பரவல் அதிகமானதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கடந்த மே 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும், அதற்கு…

இதுவரை 14,232 லிட்டர் சாராய ஊறல்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.  

கொரோனா பரவல் அதிகமானதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கடந்த மே 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும், அதற்கு முன்பிருந்தே மே 10 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதன் காரணமாக கள்ளச் சாராய விற்பனை அதிகரிக்க ஆரம்பித்தது. பல இடங்களில்  கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவர்களை, ஊறல் வைத்திருந்தவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். 

இந்த நிலையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் இயக்குனரின் உத்தரவின் பேரில் மதுவிலக்கு வேட்டை என்ற பெயரில் கள்ளச்சாராயம் தொடர்பான சோதனைகள் கடந்த 8ஆம் தேதியில் இருந்து நடந்து வருகிறது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 14,232 லிட்டர் சாராய ஊறல்கள் மற்றும் 2210 லிட்டர் கள்ளச் சாராயம்  கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 2757 டாஸ்மாக் மதுபாட்டில்களும், 14,505 வெளிமாநில மதுபாட்டில்களும் கைப்பற்றப்பட்டு 232 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட கள்ளச்சாராயம் தொடர்பான தகவல்களை 10581 மற்றும் 9498410581 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனவும், தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.   

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.