தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையை அடுத்த தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப் வட்டாரப் பகுதிகளான இரும்புலியூர், சேலையூர், செம்பாக்கம், பெருங்களத்தூர், முடிச்சூர் உள்ளிட் பகுதிகளில் அரைமணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால், தாம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகினர்.
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், உள்ளிட்ட பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நேற்று மதியம் கனமழை பெய்தது. கடந்த சில தினங்களாக கோடை வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், திடீரென்று கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனைதொடர்ந்து பரனூர், சிங்கப்பெருமாள் கோயில், மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
விழுப்புரம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதன்தொடர்ச்சியாக வானூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தததால், அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்
கொடைக்கானலில் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் விடுமுறை தினத்தில் கொடைக்கானலை சுற்றிப்பார்க்க வந்த மக்கள் கனமழை காரணமாக முக்கிய சுற்றலா இடங்களை காணமுடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நேற்று இரவு வீசிய பலத்த காற்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சேதமுற்ற வாழைகளுக்கு நஷ்ட ஈடு வழங்கிட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







