“தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்” – வில்சன், மாநிலங்களவை உறுப்பினர்

தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தெரிவித்துள்ளார். மாநிலங்களின் முன்னேற்றத்திற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒன்றுசேர்ந்து பல வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. ஆனால் ஒதுக்கப்படும்…

தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களின் முன்னேற்றத்திற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒன்றுசேர்ந்து பல வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. ஆனால் ஒதுக்கப்படும் நிதியில் இருந்து தமிழ்நாடு ஒதுக்கப்படுவதாக திமுக எம்.பிக்கள் குற்றம் சாட்டினர். இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற பூஜ்ஜிய நேரத்தில் பேசிய திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், மத்திய அரசால் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் தமிழ்நாட்டிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அப்போது மொத்தமாக 38 வளர்ச்சி திட்டங்களை குறிப்பிட்ட அவர், அவற்றிற்கு சுமார் ரூ.20287.38 கோடி நிதி ஒதுக்கப்படவில்லை எனவும் நிலுவை தொகையை விரைந்து தர வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து ஜிஎஸ்டி இழப்பீடு தொகையையும் தர வேண்டும் என்று கோரிக்கையை வைத்துள்ளார். ஜிஎஸ்டி இழப்பீடு தொகை என்பது மாநிலங்களின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது என்றும் மத்திய அரசின் இந்த போக்கு ஜிஎஸ்டி சட்டத்திற்கு எதிரானது என்றும் தெரிவித்தார்.

மேலும், ஸ்மார்ட் சிட்டி, மதிய உணவு, தொடக்க மற்றும் இடைநிலை கல்வி திட்டம் உட்பட தமிழ்நாட்டின் பல திட்டங்கள் தேவையான அளவு நிதி ஒதுக்கப்படாததால் பாதியில் நிற்கும் அபாயத்தில் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.