நமது பாரதத்தின் பழமையான கலாச்சாரம், பாரம்பரியம் நிறைந்த பகுதி தமிழ்நாடு என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகேயுள்ள கொணமங்கலம் கிராமத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அறிவுசார் மற்றும் வளர்ச்சி குறைபாடுடைய மாணவர்களுக்கு சிருஷ்டி பவுண்டேசன் சார்பில் இயற்கை முறையில் கட்டப்பட்ட 5 வீடுகளை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழகத்தில் நிறைய பேர் அமைதியான முறையில் சமுதாயத்திற்காக பல்வேறு மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நான் அறக்கட்டளைகள் சார்பில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருவதை பார்க்க வேண்டுமென கூறினேன். அவர்கள் எனக்கு அழைப்பு விடுக்கவிட்டாலும் சமுதாயத்திற்காக அவர்கள் செய்யும் மகத்தான பணியினை பார்ப்பதற்காக நானே என்னுடைய விருப்பத்தின் பேரில் வருகை புரிய விரும்புவதாக இந்த அறக்கட்டளை நிர்வாகத்திடம் தெரிவித்தேன்” என்றார்.
இது கிராமப்புற பகுதியில் அமைந்துள்ளதால் தங்கள் வருகைக்கு இந்த பகுதி சவுகரியமாக இருக்காது எனத் தெரிவித்தார்கள், அதற்கு நான், கிராமப்புற விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன்,ஆகையால் என எந்த பிரச்சனையும் இல்லை தெரிவித்ததாக கூறினார்.
மேலும் மனதாலும், உடலாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டு செய்வது என்பது மகத்தான பணி எனவும், அமெரிக்காவில் ஆட்டிசம் குறைபாடுகளால் 2 சதவீதம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த பாதிப்பு இந்தியாவில் குறைவாக காணப்படுகிறது என்று கூறிய அவர், “சமுதாய பணியில் இது போன்றவர்களின் சேவை மனப்பான்மை பங்கு என்பது என்பது மகத்தானது. தமிழகம் நமது பாரதத்தின் பழமையான கலாச்சாரம் பாரம்பரியம் நிறைந்த பகுதி மட்டுமல்லாமல் இங்கு சேவை மனப்பான்மையுடன் நிறைய பேர் அமைதியாக மக்கள் தொண்டு செய்து வருகின்றனர்” என்று கூறினார்.







