மகிழ்ச்சி என்னும் வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, “மாவீரா” என்ற புதிய திரைப்படத்தை வ.கௌதமன் இயக்கி கதாநாயகனாகவும் நடிக்கிறார்.
கனவே கலையாதே, மகிழ்ச்சி உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களுக்கு பிறகு வ.கௌதமன் இயக்கும் புதிய படத்திற்கு “மாவீரா” என பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கிறார்.
புகழ்பெற்ற “தலைமுறைகள்” நாவலை “மகிழ்ச்சி” என திரைப்படமாகவும், “சந்தனக்காடு” வீரப்பனின் வரலாற்றை நெடுந்தொடராகவும், உண்மைச் சம்பவங்களை மட்டுமே மையப்படுத்தி படைப்புகள் படைத்த வ.கௌதமன், “மாவீரா”வில் முதன் முதலாக மண்ணையும், பெண்ணையும் மானத்தையும் காத்து வாழ்ந்த ஒரு முந்திரிக்கட்டு மாவீரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு படைப்பாக்குகிறார் .
“எதிரியை கொல்லணும் என்று நினைப்பதை விட அவன் மனதை வெல்லணும்” என்கிற இலக்கோடு இத்திரைப்படம் இருக்கும் என நம்பிக்கை தரும் இயக்குநர் கெளதமன், அதே நேரத்தில், கேட்பார் எவருமில்லை என்கிற தீய எண்ணத்தோடு எவர் வரினும் “அத்து மீறினால் யுத்தம்” என்கிற பிரகடனத்தையும் “மாவீரா” பேசும் என்கிறார்.
பரபரப்பான சம்பவங்களோடு சண்டைக் காட்சிகளும் கலந்து அதிரடியாக உருவாகும் மாவீராவிற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். ஒளிப்பதிவு வெற்றிவேல் மகேந்திரன், வசனம் பாலமுரளி வர்மன், படத்தொகுப்பு ராஜா முகமது, சண்டை பயிற்சி ‘ஸ்டண்ட்’ சில்வா, நடனம் தினேஷ், மக்கள் தொடர்பு நிகில் முருகன் என முன்னணி தொழிநுட்பக்கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.
வி.கே புரொடக்ஷன் குழுமம் முதன் முறையாக தயாரிக்கும் இத்திரைப்படத்தில் நடிக்கும் முன்னணி நடிகர், நடிகையர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.







