தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தொடர்ந்து பரப்பப்படும்வதந்தியால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் வட மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து அரசு அதிகாரிகள் தமிழ்நாட்டுக்கு சூழலை ஆய்வு செய்ய வந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அவர்கள் பாதுகாப்பு உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசு வெளிமாநிலத் தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பதிவு செய்வதற்காக தனியே ஒரு வலைதளம் (https:/labour.tn.gov.in/ism/) உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வலைதளத்தில் இதுவரை சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்கள் தொழிலாளர் துறை அலுவலர்கள், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத் துறை அலுவலர்கள், வேலையளிப்போர் மூலமாகவும் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களால் சுயமாகவும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
அண்மையில் தமிழ்நாட்டில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் காட்சி பதிவுகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இது போலியான காட்சியென காவல்துறையும் விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெரிவிக்கையில், “தமிழ்நாட்டிற்கு வருகை தரும் அனைத்து மாநில தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழ்நாடு அரசு செய்து தருவதோடு, தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்களுக்கு உரிய சலுகைகளையும், பாதுகாப்பினையும் உறுதி செய்து வருகிறது. தமிழ்நாட்டில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் பரவிய பதிவுகள் உண்மைத் தன்மையற்றது, வேறு மாநிலங்களில் நடைபெற்ற சில சம்பவங்களின் வீடியோக்களையும், படங்களையும் தமிழ்நாட்டில் நடைபெற்றதாக வேண்டுமென்றே சிலர் வதந்தி பரப்பி, அச்சத்தையும் பீதியையும் உருவாக்குவோர் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (07.03.2023) திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறு பகுதியில் அமைந்துள்ள கையுறை தயாரிக்கும் நிறுவனத்திற்கு நேரில் சென்று அங்கு பணிபுரியும் பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். அதற்கு அத்தொழிலாளர்கள், சிலர் ஆறு ஆண்டுகளாகவும், பலர் ஓராண்டு முதல் இரண்டு ஆண்டு காலமாக இங்கு பணிபுரிந்து வருவதாகவும், சிலர் குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாகவும், தங்களது பணிச்சூழல் மிகவும் நல்லமுறையில் உள்ளதாகவும், தரமான உணவு, தங்குமிடம் உட்பட அனைத்து வசதிகளும் செய்துத் தரப்பட்டுள்ளன என்றும், இங்குள்ள மக்கள் தங்களுடன் சகோதரத்துவத்துடன் பழகுவதாகவும் தங்களுக்கு இங்கு எந்தவித அச்ச உணர்வும் இல்லாமல் தங்களது சொந்த ஊரில் இருப்பது போலவே பாதுகாப்பாக வாழ்வதாகவும் தெரிவித்தனர்.
அண்மைச் செய்தி : ”இபிஎஸ் உருவப்படம் எரிக்கப்பட்டதை கண்டிக்கிறோம்” – அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என வெளி மாநிலத் தொழிலாளர்களின் நம்பிக்கையை வளர்க்கும் வகையில் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு எடுத்துரைக்க வேலையளிப்போர் அமைப்புகளுக்கு தொழிலாளர் துறை அலுவலர்களால் அறிவுரைகள் வழங்கப்பட்டும், நேரடி விளக்கக் கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், தொழிலாளர் துறை அலுவலர்கள் மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையுடன் இணைந்து விளக்கக் கூட்டங்கள் நடத்தி, வெளிமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உறுதியளித்து வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.