குலசேகரப்பட்டினத்தில் விரைவில் அமைக்கப்படவுள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு அருகே விண்வெளி தொழில் பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என்று இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அந்த ஏவுதளத்திற்கு அருகே பிரத்யேக விண்வெளி தொழில் பூங்காக்களை நிறுவ தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது குறித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “விண்வெளி தளத்தின் செயல்திறனை மேம்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் தொடர்ந்து கலந்தாலோசித்து வருகிறது.
குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்படவுள்ள ராக்கெட் ஏவுதளம், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைக்கும். ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள் தயாரிப்பு, உதிரிபாகங்கள் உருவாக்கம் போன்ற தொழில்கள், அந்த ஏவுதளத்திற்கு அருகே, அதன் சுற்றுப்புறங்களில் இருந்தால், பொருளாதாரத்தை மேலும் அதிகரிக்க உதவும். எனவே இந்த ஏவுதளத்திற்கு அருகே விண்வெளி தொழில் பூங்காக்களை நிறுவ தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பூங்காக்கள், அப்பகுதியில் உள்ள சிறு, குறு தொழில்களின் வளர்ச்சிக்கு உதவும். இந்த திட்டத்திற்கு தேவையான அனைத்தையும் தமிழக அரசு செய்து கொடுக்கும்.
விண்வெளி சார்ந்த பல நிறுவனங்களை இந்தப் பகுதிக்குக் கொண்டு வருவதற்காக, TIDCO மூலம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இங்கு வர ஆர்வமுள்ள நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்ய, TIDCO மற்றும் தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை கழகம் தயாராக இருக்கும்.
விண்வெளி ஏவுதளங்களுக்கான உலகளாவிய சந்தை விலை பல பில்லியன்களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது, இது 14 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2030ம் ஆண்டு, 32 பில்லியன் டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் சந்தைப் பங்கு 2 சதவிகிதத்துக்கும் குறைவாக உள்ளது. இந்த ஏவுதளத்தின்மூலம், விண்வெளி ஏவுதள சந்தையில் இது 10 சதவிகிதமாக உயரும். இதனால் கிடைக்கப்பெறும் 3 பில்லியன் டாலர் பொருளாதாரத்தில், தமிழகம் 2 பில்லியன் டாலரை எளிதாக பெறும்.
இத்திட்டத்திற்கு மொத்தம் 2,300 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில் 2,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள நிலத்தை கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. விண்வெளியை ஆராய்வதற்காக நிறுவனங்களுக்கு உதவுவதும், இதற்கு முன் யாரும் செல்லாத இடத்திற்கு தைரியமாக செல்வதுமே எங்கள் நோக்கம்” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.