இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக மீனவர்கள் 7 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 98 மீன்பிடிப் படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஏழை மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,
மீன்பிடி உரிமைகளை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு உறுதிபூண்டுள்ளதை மீண்டும் வலியுறுத்த விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இவ்விவகாரத்தில் வலுவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்ற தமது முந்தைய யோசனையை மீண்டும் வலியுறுத்த விரும்புவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் @DrSJaishankar அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கடிதம் எழுதியுள்ளார் pic.twitter.com/SPBkBY6FKU
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 28, 2022
பாக்ஜலசந்திப் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மீறப்படுவது, இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்குத் தொடர்ச்சியான அச்சுறுத்தலாகும். எனவே, இந்திய மீனவர்கள் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கும் போது, இதுபோன்ற தொடர்ச்சியான அச்சுறுத்தலை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்திட, வலுவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்ற தனது முந்தைய யோசனையை மீண்டும் வலியுறுத்த விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் , சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.







