மத்திய அரசு மற்றும் அதன் அலுவலர்கள் இந்திய அலுவல் மொழிச் சட்டத்தை முறையாக பின்பற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
அலுவல் மொழி தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் இன்று நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி அமர்வு உத்தரவை வெளியிட்டனர்.
அதில், “தாய்மொழி என்பது மிகவும் முக்கியமானது. அடிப்படை கல்வி தாய் மொழியிலேயே வழங்கப்பட வேண்டும். ஆனால் தற்போது ஆங்கில வழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆங்கில மொழிக்கு பொருளாதார அடிப்படையிலேயே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இருப்பினும் எத்தகைய செய்தி ஆயினும், விளக்கம் ஆயினும் அதனை தாய்மொழியில் புரிந்து கொள்ளும்போதே முழுமையடைகிறது” என்று தெரிவித்தனர்.
ஒவ்வொரு மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றின் வளர்ச்சிக்கு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், ஒரு மாநில அரசு எந்த மொழியில் மத்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்புகிறதோ, அதை மொழியிலேயே மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்த நீதிபதிகள், இந்திய அலுவலக மொழி சட்டமும் இதனை உறுதி செய்கிறது என்றும் குறிப்பிட்டனர்.
ஆனால் இந்த விவகாரத்தில் மனுதாரருக்கு இந்தி மொழியில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.. விதியை மீறும் எண்ணமில்லை என மத்திய அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் மத்திய அரசு மற்றும் அதன் அலுவலர்கள் இந்திய அலுவல் மொழிச் சட்டத்தை முறையாக பின்பற்ற உத்தரவிடப்படுகிறது எனக் குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.







