தமிழ் மொழி பீனிக்ஸ் பறவை போல அதை அழித்தாலும் மீண்டும் எழுந்து வரும் என வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் வைரமுத்து பேசியுள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ் கூட்டமைப்பு சார்பில் இந்தி திணிப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து, ஒரு வரலாற்று நெருக்கடி தமிழுக்கு நேர்ந்துள்ளது எனவும் இது தமிழுக்கு புதிதல்ல 85 ஆண்டுகளாக ஒரு மொழியை திணிக்க பார்க்கிறார்கள் எனவும் பேசினார். இந்தியை அலுவலக மொழியாக கொண்டு வர மத்திய அரசு மசோதா கொண்டுவந்துள்ளது என தெரிவித்த அவர், அதனை நடைமுறைக்கு கொண்டு வருவதற்குள் தமிழர்கள் விழித்து கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ் ஒரு இனத்தின் வரலாறு என்றும், தமிழ் பண்பாடு தமிழர்களின் அடையாளம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த தமிழ் மொழியை எப்படி இந்தி மொழியால் புறந்தள்ள முடியும் என அவர் கேள்வியெழுப்பினார். தமிழ் மொழி பீனிக்ஸ் பறவைபோல, அதை அழித்தாலும் மீண்டும் எழுந்து வரும் என வைரமுத்து தெரிவித்தார். அதோடு சட்டத்தால் தமிழை அழிக்க பார்க்கிறார்கள், இதை சரித்திரத்தாலும் அழிக்க முடியாது சட்டத்தாலும் அழிக்க முடியாது எனக் கூறினார்.
தொடர்ந்து இந்தி குறித்து பேசிய அவர், முந்திரிகள் இருக்கும் மூட்டைக்குள் வண்டுவை நுழைய விட்டால் அது முந்திரியை அழித்துவிடும். அதேபோல் இந்தியை நுழைய விட்டால் அது தமிழ் மொழியை அழித்துவிடும் எனக் கூறினார். தமிழ் ஒரு இனத்தின் வரலாறு, தமிழ் பண்பாடு தமிழ் நமது அடையாளம். உலக அறிவை உள்ளங்கையில் வைத்திருந்தவர் அம்பேத்கர் அவரை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. திராவிட வழி என்பதும் தமிழ் மொழி என்பதும் ஒன்றுதான் என வைரமுத்து கூறினார்.
சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்து, நுழைந்தது தான் இந்தி மொழி. நேற்று பிறந்தது இந்தி மொழி, ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த தமிழ் மொழியை எப்படி புறந்தள்ளுவீர்கள். இரு மொழி கொள்கை நம் கொள்கை. பிரதமர் மேல் மரியாதை உள்ளது, அவர் ஐநாவிற்கு செல்கிறார் தமிழை உயர்த்தி சொல்கிறார், மன் கிபாத்தில் தமிழை பற்றி பேசுகிறார் இது எங்களுக்கு மகிழ்ச்சி தான்.
வேதாரணியத்திற்கு முன்பு இருந்த பெயர் திருமறைக்காடு, திருமறைக்காடு என்று பெயர் இருந்தால் தமிழர்களின் வரலாறு அதன் சிறப்புகள் அனைத்தும் தெரியும் என அதை மறைத்து வேதாரணியம் என்று தெரிவித்தீர்கள் எனக் கூறினார். 5 கோடி தமிழர்களுக்கு தெரிவிப்பது தமிழை படிக்க வையுங்கள், தமிழை தெரிய வையுங்கள், தமிழை கற்றுக்கொடுங்கள், தமிழ் மொழி பீனிக்ஸ் பறவை போல அதை அழித்தாலும் மீண்டும் எழுந்து வரும் என அவர் பேசினார்.