பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு நூதன தீர்ப்பளித்த பஞ்சாயத்து

உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 13 வயது சிறுமிக்கு நூதன முறையில் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் தீர்ப்பளித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் மகாராஜ்ஹஞ் என்னும் மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமத்தில் கடந்த…

உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 13 வயது சிறுமிக்கு நூதன முறையில் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் தீர்ப்பளித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் மகாராஜ்ஹஞ் என்னும் மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமத்தில் கடந்த ஜூன் 23ம் தேதி மாலையில் 13 வயது சிறுமி ஒருவர், வயல்வெளியில் காய்கறிகளை பறித்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதற்கு சிறுமி மறுக்கவே அவரை மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்ற சிறுமி நடந்த கொடூரம் குறித்து அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். சிறுமியின் பெற்றோரும், அந்த இளைஞரின் வீட்டிற்கு சென்று, இளைஞரின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞரின் பெற்றோரோ சிறுமியின் குற்றச்சாட்டை மறுத்து, அவர்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.

Representational Image

இதைத்தொடர்ந்து தங்களுக்கு நீதி வேண்டும் எனக்கூறி, சிறுமியின் பெற்றோர் கிராம பஞ்சாயத்தை அணுகியுள்ளனர். ஆனால் பஞ்சாயத்து நிர்வாகமோ, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இளைஞரின் குடும்பம் ரூ.50,000 நிதியுதவி வழங்க வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமி இளைஞரை 5 முறை செருப்பால் அடிக்கலாம் என தீர்ப்பு கூறியுள்ளனர். இந்த தீர்ப்பால் மனமுடைந்த சிறுமி மற்றும் அவரது பெற்றோர் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

பின்னர் ஜூன் 25ம் தேதி, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளனர். இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ சோதனைக்காக அனுப்பியுள்ளனர். மேலும் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.