சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

ராமநாதபுரம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள அழகன்குளம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 23) என்பவர் வெளிநாட்டில்…

ராமநாதபுரம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள அழகன்குளம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 23) என்பவர் வெளிநாட்டில் பணியாற்றி வந்தார். இதே பகுதியைச் சேர்ந்த 17 வயதான சிறுமி ஒருவரும் அழகன்குளம் பகுதியில் வசித்து வந்தார். இவர்கள் இருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் விரும்பி காதலித்துள்ளனர்.

இந்நிலையில் கார்த்திக் வெளிநாட்டில் இருக்கும்போது, சிறுமியிடம் அலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார். மேலும் வாட்ஸ் அப் மூலம், சிறுமியின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்புமாறு கேட்டுள்ளார். 17 வயதான சிறுமியும், திருமணம் செய்துகொள்ளப்போகிறவன் தான் கேட்கிறான் என்ற நம்பிக்கையில் புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த கார்த்திக், சிறுமியை சந்தித்து பேசியுள்ளார். பின்னர் அவருடன் நெருக்கமான இருக்கவும் முயற்சித்துள்ளார். ஆனால் அதற்கு சிறுமி மறுக்கவே, தனது மொபைலில் இருந்த சிறுமியின் அந்தரங்க புகைப்படங்களை காண்பித்து மிரட்டியுள்ளார். மேலும் தனது விருப்பத்திற்கு இணங்க மறுத்தால் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவதாகவும் மிரட்டி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் சமூக வலைதளத்திலும் அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினருக்கு தெரியவரவே, அவர்கள் கார்த்திக்கை அழைத்து பேசியுள்ளனர். ஆனால் கார்த்திக்கோ, சிறுமியை திருமணம் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார். இதனால் சிறுமியின் குடும்பத்தினர் ராமநாதபுரம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் கார்த்திக்கை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.