மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிக்கு மாம்பழங்களை அனுப்பி வைத்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள மமதா பானர்ஜி, நடந்து முடிந்த தேர்தலில், பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்தார். பிரதமர் மோடியும் மமதாவின் அரசை ஊழல் அரசு என்று விமர்சித்தார்.
தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகளில் பாஜக-திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களிடையே கடும் மோதல் மூண்டது. பல்வேறு நகரங்களில் நடந்த இத்தகைய வன்முறைகள் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தடுப்பூசி ஒதுக்கீட்டில் மேற்கு வங்கத்துக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகவும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், தனது அரசியல் வெறுப்பை மறந்து மமதா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு மாம்பழங்களை அனுப்பி வைத்துள்ளார். மேற்கு வங்கத்தில் இப்போது மாம்பழ சீசன் என்பதால் பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டுமல்லாமல், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் ஆகியோருக்கும் மாம்பழங்களை அனுப்பி, தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளார் மம்தா பானர்ஜி.







