தைவானின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் பறந்து கொண்டிருந்த சீனாவின் சிவிலியன் ட்ரோனை தைவான் அரசு சுட்டு வீழ்த்தியுள்ளது.
தென்சீன கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு தைவான். ஆனால், தைவானை சீனா தங்கள் நாட்டின் ஒரு அங்கமாக கருத்துகிறது. தேவை ஏற்படும் சூழ்நிலையில் தைவான் மீது படையெடுத்து தங்கள் நாட்டுடன் சேர்த்துக்கொள்வோம் என சீனா எச்சரிக்கை விடுத்து வருகிறது.
கடந்த 2-ம் தேதி அரசு முறை பயணமாக அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பொலேசி இரவு தைவானுக்கு சென்றார். அவர் தைவான் அதிபரை சந்தித்து பேசினார். நான்சி பொலேசியின் இந்த பயணம் சீனாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. நான்சி பொலேசியின் பயணத்தை தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் 4 முறை தைவானுக்கு சென்றனர். தைவானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்வதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது.
இதைதொடர்ந்து கடந்த 28ம் தேதி தைவான் நாட்டிற்கும், சீனாவுக்கும் இடையிலான கடற்பரப்பில் 2 போர் கப்பல்களை அமெரிக்க நிறுத்தியுள்ளது.
இந்நிலையில், சீயோ தீவு பகுதியில் பறந்து கொண்டிருந்த ‘சிவிலியன் ட்ரோனை’ தைவான் சுட்டு வீழ்த்தியது. சீனா நுழைவதற்கு தடைசெய்யப்பட்ட பகுதியில் தைவானின் பாதுகாப்பு குறித்த தகவல்களை சீனா அறிந்து கொள்ள இந்த ட்ரோனை அனுப்பியுள்ளதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.








