ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
டி20 உலக கோப்பை தொடர் 2022, ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற சுப்பர் 12 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சான் மசூத் 52 ரன்களும், இப்டிகர் அஹமது 51 ரன்களும் எடுத்தனர். இந்திய பந்துவீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, முதல் பத்து ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா, நிலையான விளையாட்டை வெளிப்படுத்தினர். ஹர்திக் பாண்டியா 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார். விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா இணை 113 ரன்கள் எடுத்தது.
20வது ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. ரசிகர்களை பரபரப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்ற இந்த இறுதி ஓவரில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 160 ரன்களை எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. விராட் கோலியின் 82 ரன்கள் இந்திய அணியை வெற்றி பாதைக்கு இட்டுச் சென்றது.








