இந்தியா-நெதர்லாந்து இடையே நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தகுதி சுற்று ஆட்டத்தில் இந்தியா 179 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. விறுவிறுப்பான அந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து இன்று இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் சிட்னி மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். ராகுல் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரோகித்- கோலி இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினர். ரோகித் சர்மா அரை சதமடித்து 53 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனை தொடர்ந்து கோலியுடன் சூரியகுமார் யாதவ் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கோலி நடப்பு தொடரில் தனது இரண்டாவது அரை சதத்தை பூர்த்தி செய்தார். அதிரடி காட்டிய சூரியகுமார் யாதவும் 25 பந்துகளில் அரை சதத்தை கடந்தார்.
அதிகபட்சமாக விராட் கோலி 44 பந்துகளில் 62 ரன்களும், ரோஹித் ஷர்மா 39 பந்துகளில் 53 ரன்களும், சூர்ய குமார் யாதவ் 25 பந்துகளில் 51 ரன்களும் எடுத்தனர்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது. இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி தற்போது களமிறங்கி விளையாடி வருகிறது.