நாடாளுமன்றத்தின் மக்களவையில் அவையை நடத்தவிடாமல் முழக்கமிட்டதால் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாக்கூர் உள்பட 4 எம்.பி.க்களை அவைத் தலைவர் ஓம் பிர்லா கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்பதிலிருந்து இடைநீக்கம் செய்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கடந்த 18ம் தேதி தொடங்கிய கூட்டத் தொடர் ஆகஸ்ட் 12ம் தேதி வரை 18 அமர்வுகளாக நடைபெறவுள்ளன.
கூட்டத்தின் முதல் நாள் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், இன்று காலை மக்களவை கூட்டத் தொடர் தொடங்கியது. அப்போது விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் தொகுதி எம்.பி.யான மாணிக்கம் தாகூர், கரூர் தொகுதி எம்.பி.யான ஜோதி மணி, கேரளத்தைச் சேர்ந்த ரம்யா ஹரிதாஸ் மற்றும் டி.பிரதாபன் ஆகிய எம்.பி.க்களை இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் அவை அமர்வுகளில் பங்கேற்பதிலிருந்து இடைநீக்கம் செய்தார் அவைத் தலைவர் ஓம் பிர்லா.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முன்னதாக, விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த 4 எம்.பி.க்களும் அவைத் தலைவர் முன் நின்று பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபட்டனர். பிற்பகல் 3 மணிக்கு மேல் இதுகுறித்து விவாதிக்கலாம் என்று ஓம் பிர்லா தெரிவித்தார்.
எனினும், அவர்கள் தொடர்ந்து கூச்சலிட்டு வந்தனர். இதைத் தொடர்ந்து அவைத் தலைவர், அவர்கள் நால்வரையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
“பதாகைகளை காண்பிக்க வேண்டுமென்றால் வெளியே சென்று காண்பியுங்கள். நான் விவாதிக்கலாம் என்று கூறுகிறேன். ஆனால், நீங்கள் நான் கூறுவதை கேட்க மறுக்கிறீர்கள்” என்று கூறி அவர்களை கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்தார்.
பின்னர், அவையை நாளைக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.