குலசையில் இன்று சூரசம்ஹாரம் – நியூஸ் 7 தமிழ், பக்தி யூடியூப் சேனலில் நேரலை

உலகப்புகழ் பெற்ற குலசேகரப்பட்டினத்தில் இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதனை நியூஸ் 7 தமிழ் மற்றும் பக்தி யூடியூப் சேனலில் நேரலை ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.   தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள ஞானமூர்த்தீசுவரர் உடனுறை…

உலகப்புகழ் பெற்ற குலசேகரப்பட்டினத்தில் இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதனை நியூஸ் 7 தமிழ் மற்றும் பக்தி யூடியூப் சேனலில் நேரலை ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.

 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் இந்தாண்டு தசரா திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய நாளில் காப்பு கட்டி விரதம் தொடங்கிய பக்தர்கள், நேர்த்தி கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து காணிக்கை வசூலித்து, அதை நாளை (6ம்தேதி) கோயிலில் செலுத்தி, காப்பை களைந்து தங்களது விரதத்தை முடிக்கின்றனர்.

 

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று முத்தாரம்மனை வழிபட்டனர். 9ம் நாளான நேற்று இரவில் அன்ன வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 10ம் திருவிழாவான இன்று (புதன்) காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் கடற்கரை சிதம்பரரேஸ்வர கோயிலுக்கு முன் எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து கடற்கரை மேடையில் அம்மன் எழுந்தருளி, அங்கு அபிஷேகம் நடக்கிறது. நாளை அதிகாலை 2 மணிக்கு சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு முன் எழுந்தருளி, சாந்தாபிஷேக ஆராதனை, 3 மணிக்கு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. பின்னர் நாளை காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை வீதியுலா புறப்படுதல், மாலை 4 மணிக்கு அம்மன் கோயில் வந்தடைதல், மாலை 4.30 மணிக்கு காப்பு களைதல், நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறுகிறது.

 

அம்மன் மாலை 4 மணிக்கு கோயிலை வந்தடைந்ததும் கொடியிறக்கப்படும். அதன்பின்னர் பக்தர்கள் காப்பு அவிழ்த்து, வேடம் களைந்து, விரதத்தை நிறைவு செய்வார்கள். நாளை மறுநாள் (7ம்தேதி) பிற்பகல் அம்மனுக்கு சிறப்பு பாலாபிசேகம் நடைபெறுகிறது. இன்று மகிஷா சூரசம்ஹார விழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வேடங்களில் கோயிலில் குவிந்துள்ளனர். இதனால் பாதுகாப்பு பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, சூரசம்ஹார நிகழ்ச்சி நியூஸ் 7 தமிழ் மற்றும் நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனலில் இன்று இரவு நேரலை செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் பக்தி யூடியூப் சேனலை பின் தொடர்ந்து நிகழ்ச்சியை காணலாம்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.