குஜராத்தைச் சேர்ந்த ஆசாராம்பாபு என்பவர் ஆசிரமம் நடத்தி வந்தார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு தனது ஆசிரமத்தில் இருந்த மைனர் சிறுமி உள்ளிட்ட பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கினை விசாரித்த ஜோத்பூர் நீதிமன்றம் ஆசாராம் பாபுவிற்கு ஆயுள் தண்டனை விதித்தது.
இன்னும் சில வழக்குகளிலும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர் ராஜஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் தனது வயது மற்றும் உடல் நிலையை காரணம் காட்டி தனது சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் ஏதேனும் நிவாரணம் வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தை நாடுமாறு உத்தரவிட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.








