லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினியின் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2012-ம் ஆண்டு தனது கணவராக இருந்த நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2015-ம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் ”வை ராஜா வை” என்ற படத்தை இயக்கினார்.
இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மூன்றாவது திரைப்படமான லால் சலாம் படத்தின் அறிவிப்பு வெளியானது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் எங்கிற கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் உள்ளிட்டோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படிப்பிடிப்பு மும்பை, புதுச்சேரி, திருவண்ணாமலை போன்ற பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
லால்சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினியின் காட்சிகள் 20 நிமிடங்கள் வரை இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். தற்போது அவர் பகிர்ந்த ரஜினிகாந்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.







