கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையின் சென்னை வீடு விற்கப்பட்டபோது, அவரது தந்தை மனமுடைந்து அழுததாக நடிகரும், தயாரிப்பாளருமான மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் ரெகுநாத பிச்சை – லக்ஷ்மி தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் சுந்தர் பிச்சை. இவர் 1989-ம் ஆண்டு ஐ.ஐ.டி. காரக்பூரில் சேருவதற்குமுன் தன் பள்ளிப் படிப்பு மற்றும் குழந்தைப் பருவம் முழுவதையும் சென்னையில் தான் கழித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் சுந்தர் பிச்சை வாழ்ந்த வீடு விற்பனைக்கு வருகிறது என்று கேள்விப்பட்ட நடிகரும் தயாரிப்பாளருமான மணிகண்டன் உடனடியாக அதை வாங்கியுள்ளார். இது குறித்து பகிர்ந்த மணிகண்டன், வீட்டை வாங்கும்போது, சுந்தர் பிச்சையின் தந்தை ஆர்.எஸ். பிச்சை அமெரிக்காவில் வசித்து வந்ததாகவும், அதற்காக 4 மாதங்கள் காத்திருந்ததாகவும் தெரிவித்தார்.
முதல் சந்திப்பில், சுந்தரின் தாயார் தனக்கு பில்டர் காபி போட்டு கொடுக்க, அவரது தந்தை சொத்து ஆவணங்களை தன்னிடம் வழங்கியதாக தெரிவித்தார் மணிகண்டன். அவர்களது பணிவு மற்றும் அடக்கம் ஆகிய அணுகுமுறையால் வியந்து போனதாக தெரிவித்த மணிகண்டன் சொத்து பதிவு நடைமுறையின்போது கூட கூகுள் சி.இ.ஓ. பெயரை பயன்படுத்த கூடாது என அவரது தந்தை விடாப்பிடியாக இருந்ததாக அவர் கூறினார்.
இந்த சொத்து ஆவணங்களை சுந்தர் பிச்சையின் தந்தை வழங்கியபோது, சில நிமிடங்கள் வரை உணர்ச்சி பெருக்குடனேயே காணப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்த வீடு இருந்த பகுதியை காலி மனையாக்கி விட்டு, வில்லா ஒன்றை கட்டியெழுப்ப திட்டமிட்டு உள்ளாதாகவும், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் பணி நிறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா