மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விளக்கம் அளிக்க அப்போலோ மருத்துவர்கள் பத்து பேருக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த ஜெயலலிதா, கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் சந்தேகம் எழுப்பியதை அடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க கோரி, அப்போலோ மருத்துவமனை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததால் இரண்டு ஆண்டுகளாக விசாரணை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் 7-ஆம் தேதி முதல் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை மீண்டும் தொடங்குகிறது.
முதற்கட்டமாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கியபோது உடனிருந்த 10 மருத்துவர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. தடைபட்ட விசாரணை 2 ஆண்டுகள் கழித்து மறுபடியும் தொடங்கவுள்ள நிலையில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.







