சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கிற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இன்று அனைத்து உறுப்பினர்களுக்குமான பதவியேற்பு விழா நடைபெற்றது.
வரலாற்று புகழ்மிக்க சென்னை ரிப்பன் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் உறுப்பினர்களுக்கு ஆணையர் ககந்தீப்சிங் பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார். விசிக சார்பில் 4 உறுப்பினர்கள் பதவியேற்று கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பியுமான தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
‘சாதாரண தொண்டனின் பதவியேற்பு நிகழ்வை கண்டு சந்தோஷம் அடையும் தலைவன்’, ’தாயுமானவர்’ என நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பலர் பகிர்ந்து வருகின்றனர். 2021 சட்டமன்ற தேர்தலில் விசிக சார்பில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்பு விழாவிலும் அவர் பங்கேற்றது குறிப்பிடதக்கது.
அது குறித்து விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைசெல்வன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒன்றில் பேசுகையில் ‘எங்க தலைவர் முதல் நாள் மகனை பள்ளிக்கு அழைத்து சென்று விடும் தந்தை போல எங்களை சட்டமன்றத்திற்கு அழைத்து சென்றார்’ என்று பேசி வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மாமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் விடுதலை சிறுத்தைகளுக்கு மக்கள் அளித்துள்ள அங்கீகாரத்திற்கு நன்றி எனவும் தெரிவித்தார்.









