மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலைய இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்கியது. இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரமில்லை எனவும், வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். மேலும் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தங்களிடம் ஆலோசிக்காமல் வேதா நிலையத்தை அரசுடமையாக்கியதும், வீட்டிற்கு 67 கோடியே 90 லட்ச ரூபாய் அளவிற்கு இழப்பீடு நிர்ணயித்து கீழமை நீதிமன்றத்தில் செலுத்தியதும் தவறு எனத் தெரிவித்தனர்.
இந்த வழக்கானது நீதிபதி சேஷசாயி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். வேதா நிலையத்திற்காக கீழமை நீதிமன்றத்தில் அரசு செலுத்திய 67.95 கோடி ரூபாய் இழப்பீடு தொகையை அரசு திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறிய நீதிபதி, 3 வாரத்துக்குள் வேதா நிலையத்தை வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு பேட்சியளித்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா, இது ஆரம்பகட்டம் தான் என்றும், பல கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு வெற்றி கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி செயல்படுவோம் என்றும் கூறினார்.
செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மக்களின் விருப்பப்படியே வேதா நிலையம் அரசுடமையாக்கப்பட்டதாகக் கூறினார். கட்சி நிர்வாகிகள் உடனான ஆலோசனைக்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.