திருமங்கலத்தில் கருங்கல்லால் வடிவமைக்கப்பட்ட ரஜினியின் சிலையை நிறுவி, பூஜை செய்யும் ரசிகரின் வினோத வழிபாடு காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கார்த்திக் என்பவர் திருமண தகவல்
மையம் நடத்தி வருகிறார். நடிகர் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகரான இவர், தான் வாடகைக்கு இருக்கும் வீட்டின் ஒரு அறையை ரஜினியின் கோயிலாக மாற்றியுள்ளார். அந்த அறையில் ரஜினி நடித்த திரைப்படங்களில் உள்ள காட்சிகளின் புகைப்படங்களை ஒட்டி வைத்து, நாள்தோறும் தீபாராதனையும் அபிஷேகமும் செய்து வருகிறார்.
இந்நிலையில், 3 அடி உயரத்தில், 250 கிலோ எடை கொண்ட கருங்கல்லினால் வடிவமைக்கப்பட்ட ரஜினியின் சிலையை நிறுவி பூஜை செய்தார். பூஜை முடிந்த பின்னர் சிலையை எடுத்து கோயிலாக அமைக்கப்பட்ட அறையில் வைத்து, பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து தீபாராதனை செய்தார்.
இதையும் படியுங்கள் : சமூகநீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும்..! – ராமதாஸ் பேச்சு
ரஜினி மீது அதீத பற்று கொண்டுள்ள ரசிகர் கார்த்திக்கிற்கு அவரது பெற்றோரும், மனைவியும் ஆதரவு தெரிவித்துள்ளனர். வீட்டின் அறையையே ரஜினியின் கோயிலாக மாற்றி, நாள்தோறும் பூஜை செய்து வரும் கார்த்திக்கின் செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.







