“கோவிஷீல்ட் தடுப்பூசி குறித்து ஆய்வு நடத்த வேண்டும்” – உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு!

கோவிஷீல்ட் தடுப்பூசி குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என  உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பால் கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர்.  இந்தியாவில்…

கோவிஷீல்ட் தடுப்பூசி குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என  உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பால் கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர்.  இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 5,33,586 பேர் பலியாகினர்.  மொத்தம் மூன்று அலையாக பரவிய கொரோனா வைரஸால் இதுவரை தமிழ்நாட்டில் 36,11,852 பேர் பாதிக்கப்பட்டு,  38,086 பேர் உயிரிழந்தனர்.

இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை குணப்படுத்த  கோவாக்சின்,  கோவிஷீல்டு, ஸ்ப்ட்னிக்-வி,  நோவாக்ஸ்,  பைஃசர்  உள்ளிட்ட  தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவற்றில்  இந்தியாவில் கோவாக்சின்,  கோவிஷீல்டு தடுப்பூசிதான் அதிகம் போடப்பட்டது.

முன்னதாக,  கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்ட சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக தகவலக்ள வெளியன நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியால் உயிரிழப்புகள்,  தீவிர பாதிப்புகள் ஏற்பட்டதாக லண்டனில் உள்ள உயர் நீதிமன்றத்தில் 51 வழக்குகள் தொடரப்பட்டு விசாரணையில் உள்ளன.

அவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் ‘இந்தத் தடுப்பூசியின் பக்க விளைவால் பக்கவாதம்,  மூளை பாதிப்பு,  மாரடைப்பு,  நூரையீரல் ரத்தம் உறைதல் உள்ளிட்டவை ஏற்படுகிறது.  எனவே, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

இதையடுத்து,  லண்டன் உயர்நீதிமன்றத்தில் தடுப்பூசி தொடர்பான வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் அஸ்ட்ராசெனகா நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கை ‘தி டெய்லி டெலிகிராப்’ பத்திரிகையில் வெளியாகியுள்ளது.  அதில், ‘ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியால் (கோவிஷீல்டு) மிகவும் அரிதான பக்க விளைவாக ரத்தம் உறைதல் ஏற்படலாம்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கோவிஷீல்ட் தடுப்பூசியினால் ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பாக மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஏதேனும் பின்விளைவுகள் அல்லது அபாயகரமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா என்பதை மருத்துவ நிபுணர்கள் குழு கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள் பொதுநல மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.