உக்ரைனிலிருந்து மருத்துவம் பயின்ற மாணவர்கள் இந்தியாவில் மருத்துவக் கல்வியை தொடர சாத்தியக்கூறுகள் இல்லை என தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர், மருத்துவர் செந்தில் நீயூஸ் 7 தமிழின் கள ஆய்வுக்கு பேட்டியளித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த சில நாட்களாக போர் நீடித்து வருகிறது. இதனால் அங்கிருக்கும் பிற நாட்டை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் உக்ரைனில் இருந்து வெளியேறிவருகின்றனர். ஐநா வெளியிட்ட தகவலின்படி 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நாட்டை விட்டு வெளியேறியது தெரியவந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
போர் காரணமாக பாதியிலேயே நாடு திரும்பிய மாணவர்கள் தங்களது படிப்பை உள்நாட்டிலேயே தொடர அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் அனைவரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும், மாணவர்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் இன்று காலை 10 மணி முதல் நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு நடத்தி வருகிறது.
இந்த நிலையில், உக்ரைனிலிருந்து மருத்துவம் பயின்ற மாணவர்கள் இந்தியாவில் மருத்துவக் கல்வியை தொடர சாத்தியக்கூறுகள் இல்லை என தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர் மருத்துவர் செந்தில் நீயூஸ் 7 தமிழின் கள ஆய்வுக்கு பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுதும் 90 ஆயிரம் மருத்துவ இடங்கள் நீட் தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றது. 90 ஆயிரம் இடங்களுக்கு நடைபெறும் நீட் தேர்வில் 9 இலட்சம் மாணவர்கள் தேர்வாகிறார்கள். நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களில் 10 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவம் பயில வாய்ப்புள்ளது” என்று பேசினார்.
தொடர்ந்து, “நீட்டில் வெற்றி பெற்றும் மருத்துவக் கல்வி பயில முடியாத மாணவர்கள் நர்ஸிங் போன்ற படைப்புகளை படித்து வருகிறார்கள். இந்தியாவில் நீட் தேர்வு விதிமுறைகளின் படியே நாம் மருத்துவம் பயில முடியும். வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் இந்தியாவில் FMG என்கிற தேர்வில் வெற்றி பெற வேண்டும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்களில் 10 சதவீத மாணவர்களே FMG தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். நீட்டில் வெற்றி பெற்று மருத்துவம் பயில முடியாத மாணவர்களுக்கு ஒரு நியாயம், உக்ரைனிலிருந்து வந்தவர்கள்களுக்கு ஒரு நியாயம் வழங்க முடியாது. போர் நிறைவு பெற்றவுடன் மீண்டும் அதே நாட்டில் மருத்துவம் பயிலலாம். உக்ரைனிலிருந்து வந்த மாணவர்களுக்கு மத்திய – மாநில மாற்று வழிகளைதான் ஏற்படுத்தி தர வேண்டும் என்று தெரிவித்தார்.
முன்னதாக உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் உள்நாட்டிலேயே பயில போதிய நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.