மாணவர்கள் நேரத்தை கணக்கீடு செய்ய வேண்டும் என நியூஸ் 7 தமிழ் கல்வி கண்காட்சியி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
12-ம் வகுப்பிற்கு பிறகு அடுத்து என்ன படிக்கலாம் என்கிற குழப்பம் மாணவர்கள் மத்தியில் எழுவதுண்டு. உயர்கல்வி படிப்பதற்கான போதிய வழிகாட்டுதல் இல்லாமல் பல மாணவர்கள் ஏதாவது ஒரு கல்வி சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை போக்கும் வகையில், நியூஸ்7 தமிழ் முன்னெடுப்பு மேற்கொண்டு கல்வி கண்காட்சியை நடத்தி வருகிறது. இந்த நிலையில் நியூஸ் 7 தமிழ் சார்பில் மதுரை காந்தி மியூசியத்தில் உயர் கல்விக்கு வழிகாட்டும் மாபெரும் கல்வி கண்காட்சி பாரம்பரிய கலை நிகழ்ச்சியுடன் இன்று துவங்கியுள்ளது. இந்த கண்காட்சியை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் , மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதனையும் படியுங்கள்: மதுரையில் பிரம்மாண்டமாக தொடங்கிய நியூஸ் 7 தமிழின் ”கல்வி கண்காட்சி”
இதனைத் தொடர்ந்து நியூஸ்7 தமிழ் கல்விக் கண்காட்சியில் பேசிய நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் தெரிவித்ததாவது..
சாதனையாளர்களை இரண்டாகப் பிரிக்கலாம். சிலர் பிறவியிலேயே திறமைசாலியாக இருப்பார்கள். ஆனால் 99% உழைப்பினால் முன்னேறியர்கள் அதிகம். உழைப்பினால் நம்மால் எதையும் சாதிக்க முடியும். மாணவர்கள் இதனை நன்றாக மனதில் பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மாணவர்களுக்கு சில குண நலன்கள், பண்புகள் இருக்க வேண்டும் அப்போதுதான் சாதனையை நோக்கி அவர்களால் பயணிக்க முடியும். அதேபோல ஒழுக்கமும், கட்டுப்பாடும் மாணவர்களுக்கு இருக்க வேண்டும். மாணவர்கள் வாழ்க்கையில் எதையெல்லாம் தவிர்க்க வேண்டுமோ அதனை முதலில் தவிர்க்க வேண்டும்.
மாணவர்கள் நேரத்தை முறையாக பயன்படுத்த வேண்டும். காலத்தை செலவிடுவது குறித்து ஒரு மாதம் கணக்கிட வேண்டும். ஒரு மாதத்திற்கு பிறகு அந்த கணக்கை நீங்கள் பார்க்கும் போது உங்களுடைய வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். மாணவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நேர கணக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும்.
மாணவர்களுக்குள் தன்னம்பிக்கை பிறக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் அடுத்த கட்ட நகர்வை நோக்கி ஒவ்வொரு நொடியும் யோசிக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கும் அதன் நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மலுக்கும் வாழ்த்துகள். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நியூஸ் 7 தமிழின் நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல் ஆற்றிய வரவேற்புரையை சுட்டிக்காட்டியதோடு, உண்மையாகவும் , நேர்மையாகவும் பேசியதற்கு அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
– யாழன்