கள்ளக்குறிச்சி பள்ளியில் நடந்த வன்முறைச் சம்பவத்திற்கு மாணவியின் தாயாரே காரணம் எனத் தனியார்ப் பள்ளியின் செயலாளர் பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி சின்ன சேலத்தில் பள்ளி மாணவி உயிரிழப்பு சம்பவத்தால் வன்முறை வெடித்துள்ளது. இதனால், காவல்துறையினர் வன்முறையைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தனியார்ப் பள்ளியின் செயலாளர் சாந்தி ரவிக்குமார் பேஸ்புக்கில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக காவல்துறை விசாரணைக்குப் பள்ளி நிர்வாகம் தரப்பில் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், இந்த விவகாரத்தில், எதனையும் மறைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவியின் தாயார் தங்களைச் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளதாகத் தெரிவித்த அவர், காவல்துறை விசாரணை வளையத்திற்குள் இருப்பதால் மாணவியின் தாயாரைச் சந்திக்கவில்லை எனக் கூறியுள்ள அவர், எங்கும் ஓடி ஒளியவில்லை, அப்படி இருக்க ஏன் வன்முறையைத் தூண்ட வேண்டும்? ஏன் பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து வீடியோவில் பேசியுள்ள அவர், தவறான இமேஜை பள்ளி மீது கொண்டு வந்துள்ளதாகவும், 1998-ஆம் ஆண்டில் தொடங்கிப் பல தடைகளைக் கடந்து ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குக் கல்வி கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அண்மைச் செய்தி: ‘‘இனி வரப்போகும் தேர்தலில் வெற்றி பெறப் போவது நாங்கள் தான்’ – இபிஎஸ்’
மேலும், பள்ளியின் வாகனங்கள் என்ன செய்தது? மாணவர்கள் படிப்பதற்காக வைத்திருந்த புத்தகங்கள் என்ன செய்தது எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், வகுப்பறைகளைப் பொருட்களைச் சூறையாடியுள்ளதாகவும், மாணவர்களின் சான்றிதழ்களை எரித்து நாசம் செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். எல்கேஜி முதல் 12-ஆம் வகுப்ப வரை படிக்கும் மாணவர்களின் ஆவணங்களை எரித்து விட்டதாகக் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள அவர், வன்முறையாளர்கள் பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை வீணடித்து விட்டதாகவும், இந்த வன்முறைக்கும் சேதத்திற்கும் மாணவியின் தாயார் தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும், அவர் தான் பதில் சொல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், மாணவியின் செல்போன் எண்ணையும், அவரது தாயாரின் செல்போன் எண்ணையும் ஆய்வு செய்யுங்கள். அப்போது உண்மை என்னவென்று தெரிய வரும் எனத் தெரிவித்துள்ள அவர், மாணவி இறப்பிற்கான காரணம் அதில் இருக்கிறது எனப் பள்ளியின் செயலாளர் சாந்தி ரவிக்குமார் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.








