திருவாரூர் அருகே பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவனை ஒன்றைரை ஆண்டுகளுக்கு பிறகு மும்பையில் போலீசார் பத்திரமாக மீட்டனர்.
திருவாரூர் அருகே இளவங்கார்குடி பகுதியைச் சேர்ந்த விறகு வியாபாரி அறிவழகன். இவரது மகன் மாதேஷ் அரசு உதவிபெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாதேஷை, அவரது பெற்றோர் படிக்காமல் இருந்ததற்காக அடிக்கடி திட்டியுள்ளனர். இதனால் படிக்க விருப்பமில்லை என நினைத்த அவர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வீட்டை விட்டு வெளியேறினார்.
மகனை காணவில்லை என அவரது பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் திருவாரூர் தாலுக்கா போலீசார் வழக்குப் பதிந்து மாதேஷை தேடி வந்தனர். ஆனால் அவர் இருக்குமிடம் குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில், மாதேஷ் புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்துள்ளார்.
அந்த புதிய ஆதார் அட்டை இளவங்கார்குடியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளது. புதிய ஆதார் அட்டை குறித்து காவல்துறையினரிடம் அறிவழகன் தெரிவித்துள்ளார். அதைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தியதில், மாதேஷ் மும்பையில் இருப்பதும், அங்கு விழாக்களின் போது மண்டபங்களை அலங்கரிக்கும் குழுவில் இணைந்து பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
பின்னர், தந்தை அறிவழகனை அழைத்து கொண்டு காவல்துறையினர் மும்பை சென்று மாதேஷை மீட்டனர். அப்போது மகனை கண்ட தந்தை அறிவழகன் ஓடி சென்று கட்டி அனைத்து கண்ணீர் விட்டு கதறிய நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.








