இலங்கை கடற்படையால் ஒரே நாளில் 55 தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை, 6 விசைப்படகுகளையும், 43 மீனவர்களையும் சிறைபிடித்தது. கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் காங்கேசன் கடற்படை முகாமில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மேலும் 12 மீனவர்களைக் கைது செய்துள்ள இலங்கை கடற்படையினர், இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசுக்கு மத்திய, மாநில அரசுகள் அழுத்தம் தர வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் எண்ணூறுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிப்படையும் எனக் கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்