உலகில் எந்த நாடும் இலங்கையை போன்று பொருளாதார நெருக்கடி நிலையில் சிக்கித் தவித்ததில்லை என முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நெருக்கடியில் தவிக்கும் இலங்கை
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்டை நாடான இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். அதிபராக இருந்த அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டே விரட்டி அடிக்கப்பட்டார். உயிருக்கு பயந்து, மாலத்தீவு, சிங்கப்பூர், தாய்லாந்து சென்ற கோத்தபய ராஜபக்சே தற்போது மீண்டும் இலங்கை திரும்பியுள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாமல் தற்போதைய இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவும் தவித்து வருகிறார். சர்வதேச கடனுதவிகள் கிடைக்காமல், இலங்கையில் நிர்வாகம் சீர்குலைந்து இருக்கிறது.
இலங்கையில் புதிய கட்சி
இந்த நிலையில், புதிய இலங்கை சுதந்திராக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி இலங்கையில் தொடங்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக இலங்கை சுதந்திரா கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரும், கலுதாரா மாவட்ட எம்.பி.யுமான குமார வெல்கமா இருக்கிறார். கொழும்பில் உள்ள புதிய இலங்கை சுதந்திராக் கட்சியின் தலைமை அலுவலகத்தை முன்னாள் அதிபரும் சுதந்திரா கட்சியின் முன்னாள் தலைவருமான சந்திரிகா குமாரதுங்க தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;
வெட்கப்படுகிறேன் – சந்திரிகா
இலங்கையின் அதிபராகவும், முன்னாள் அதிபராகவும் மிகவும் பெருமையுடன் உலகம் முழுவதும் பயணித்தேன். தற்போது வெட்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறேன். “நாட்டை மீட்க அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும்” என குமார வெல்கம கூறி இருக்கிறார். ஆனால் திருடர்களை சேர்த்துக்கொள்ள வேண்டாம் என நான் அவரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
இங்கிலாந்தில் மூன்று மாதங்கள் தலைமறைவாக இருந்தேன். யாரையும் சந்திக்கவில்லை. ராஜபக்சக்களின் முறையற்ற ஆட்சியால் மட்டுமே இலங்கை இந்த நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது . இலங்கை சுதந்திரா சுதந்திரக் கட்சி தற்போது எந்தக் கொள்கையையும் கொண்டிருக்கவில்லை என்றும், கட்சியில் தற்போது வெறி பிடித்தவர்களே உள்ளனர் . அதனால் தான் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது என்று சந்திரிகா குமாரதுங்க குறிப்பிட்டார்.
யார் இந்த சந்திரிகா?
இலங்கையின் ஐந்தாவது அதிபராக 1994 முதல் 2005 வரை 11 ஆண்டுகள் பதவியில் நீடித்தவர் சந்திரிகா குமார துங்க. இவரது தந்தை இலங்கை பிரதமராகவும், இவரது தாய் முதல் பெண் பிரதமராகவும் பதவி வகித்துள்ளனர். இலங்கையின் மேற்கு மாகாண முதலமைச்சராகவும், இலங்கை சுதந்திரா கட்சியின் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார் சந்திரிகா. சந்திரிகா குமாரதுங்க இலங்கை அதிபராக இருந்த போது, விடுதலைப்புலிகளுடனான உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அவரது முயற்சி பலன் தரவில்லை.
-ஜெயகார்த்தி