சென்னை பெரம்பூர் நகைக்கடை கொள்ளை விவகாரம், சென்னை IIT மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டது குறித்து விசாரிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
இருசக்கர வாகனங்களில், ஹெல்மெட் அணிந்து செல்வோரை பாராட்டும் விதமாக சென்னை பெருநகரில் அனைத்து சிக்னல்களிலும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. சென்னை வேப்பேரி சிக்னலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சரட்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னையில் போக்குவரத்து காவல்துறையினரின் தொடர் விழிப்புணர்வு காரணமாக, கடந்த ஆண்டு ஹெல்மெட் அணிபவர்களின் எண்ணிக்கை 85 சதவீதமாக உயர்ந்துள்ளது. அது மட்டுமல்லாது பின்னால் அமர்ந்து செல்பவர்களும் 13 சதவீதம் அளவிற்கு ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர்.
அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை ஊக்குவிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து ஹெல்மெட் அணிந்து வந்தவர்களை பாராட்டும் வகையில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் , இது போன்று தொடர்ந்து ஒரு வாரம் இந்த விழிப்புணர்வு நடைபெறும் எனவும், ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் உட்பட்ட பகுதிகளில் 5000 சான்றிதழ்கள் கொடுப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். அதே போல் விரைவில் சென்னையின் முக்கிய சாலைகளில் வேகமாக செல்வதை கண்டறிந்து உடனடியாக அபராதம் விதிக்கும் ஸ்பீடு கேம் மானிட்டர் பொருத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ நகைகள் கொள்ளையைடிக்கப்பட்ட சம்பவம் குறித்து பேசிய காவல் ஆணையர், பெரம்பூர் நகைக்கடை கொள்ளை தொடர்பாக முக்கிய தகவல்கள் கிடைத்து உள்ளன. எந்தக் கடையில் கொள்ளை அடிக்கலாம் என்பதற்காக ரெய்கி ஆப்ரேஷன் எனப்படும் கொள்ளையடிப்பதற்கு முன்பாக நோட்டமிட்டு திட்டம் போட்டும் சம்பவத்தை கொள்ளையர்கள் நிகழ்த்தியுள்ளனர். சில கொள்ளையர்களின் அடையாளம் தெரிந்து உள்ளதாகவும், சில கொள்ளையர்களின் பெயர்கள் தெரிந்துள்ளதாகவும், இதே போன்று ஏற்கனவே குற்றம் செய்த குற்றவாளிகளின் பட்டியல் வைத்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பெரம்பூர் நகைக்கடை கொள்ளை சம்பவத்தை பொறுத்தவரையில் இரண்டு துணை ஆணையர்கள், மூன்று உதவி ஆணையர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இரண்டு தனிப்படைகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது வெளிமாநில கொள்ளையர்கள் என்பதால் அவர்களை பிடிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 7 தனிப்படை பிரிவு போலீசார் இந்த விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, கூடுதலாக இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலும் கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றை ஒப்பிட்டு பார்த்து விசாரணை என்பது நடைபெற்று வருகிறது. கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட போலி பதிவு எண் மூலம் கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.
இதையடுத்து சென்னை ஐஐடி மாணவர் உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரம் குறித்தும் பேசிய சங்கர் ஜிவால், உயிரை மாய்த்துக் கொண்ட மற்றும் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவர்களிடம் இருந்து கடிதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையிலும், பிரேத பரிசோதனை அறிக்கையை அடிப்படையாக வைத்தும் தொடர்ந்து அடுத்த கட்ட விசாரணை நடத்தப்படும்.
சென்னை ஐஐடியில் செயல்படும் நிர்வாக குழு விசாரணை நடத்தி வருவதாகவும், ஆசிரியர்கள் கொடுத்த மன அழுத்தம் காரணமாக மாணவன் உயிரை மாய்த்துக் கொண்டாரா என்ற கோணத்திலும் , சாட்சியங்களை அடிப்படையாக வைத்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்க மேலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல் ஆணையர்
சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
மேலும் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை விவகாரம் தொடர்பாக சென்னை சைபர் கிரைம் உதவியை நாடியுள்ளதாக கூறிய ஆணையர் சங்கர் ஜிவால், திருவண்ணாமலை கொள்ளையர்களை பிடிக்க தொழில்நுட்ப ரீதியாகவும், செல்போன் அழைப்புகள் உள்ளிட்டவை மூலமாகவும் சென்னை காவல்துறையின் சைபர் கிரைம் போலீசார் உதவி வருவதாக தெரிவித்துள்ளார்.
அதே போல் சென்னை யானைகவுனியில் நகைக்கடை உரிமையாளரிடம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், 70 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் தீவிரவாத தொடர்புக்கு உட்பட்டவர்களா என எந்த தகவலும் இல்லை எனவும் கூறினார். செல்போன் மற்றும் செயின் பறிப்புகளை பொறுத்தவரையில், கடந்த 2021-ஆம் ஆண்டு 470 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்தாண்டு 230 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பாதியாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்தால் ரோந்து வாகனம் 2 நிமிடம் 15 விநாடிகளுக்குள் சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். நகைக்கடை உரிமையாளர்கள் தங்கள் பகுதி காவல் நிலைய எண் உள்ளிட்ட விவகாரங்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் சென்னை காவல்துறை ஆணையர் அறிவுரை வழங்கியுள்ளார்.
முன்னதாக ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ரோஜா மலர்களையும் பரிசாக அளித்தார். காதலர் தினத்தை முன்னிட்டு இந்த சிகப்பு ரோஜாக்களை நான் பரிசாக அளிக்கவில்லை எனவும் முன்கூட்டியே திட்டமிட்ட நிகழ்வு இது என வேடிக்கையாக தெரிவித்தார்.
- பி. ஜேம்ஸ் லிசா














