கோவை தனியார் கல்லூரியில் வடமாநிலத் தொழிலாளர்கள், மாணவர்கள் மோதல்!

கோவை சூலூர் அருகே கல்லூரி மாணவர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் மோதிக் கொண்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம், சூலூர், கண்ணம்பாளையம் பகுதியில் தனியார் பாலிடெக்னிக் செயல்பட்டு வருகிறது. இந்தக்…

கோவை சூலூர் அருகே கல்லூரி மாணவர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் மோதிக் கொண்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம், சூலூர், கண்ணம்பாளையம் பகுதியில் தனியார் பாலிடெக்னிக் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி விடுதியின் உணவகத்தில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு உணவு உட்கொள்ள வந்த மாணவர்கள் அசைவ உணவு அதிகமாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு பணியில் இருந்த வட மாநில தொழிலாளர்கள் மறுத்துள்ளனர்.

இதையடுத்து இரண்டு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. விறகுக் கட்டைகளை எடுத்துக்கொண்டு மாறி மாறி தாக்கியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சூலூர் போலீஸார் அவர்களை சமாதானம் செய்தனர். கல்லூரி நிர்வாகமும் இந்தப் பிரச்னை குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்தச் சம்பவத்தைப் பார்த்து அங்கிருந்த மாணவிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மாணவிகள் செல்போனில் எடுத்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.