பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு 15-ம்தேதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருகிறது. 14-ம் தேதி முதல் 17-ம்தேதி வரை 4 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாகும். அதனால் பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்லும் மக்கள் 13-ந்தேதி வெள்ளிக்கிழமை முதல் பயணத்தை தொடங்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் வெளியூர் பயணத்திற்கு ரயிலில் 4 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்துவிட்டனர். சிறப்பு ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருகிறது.
தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அரசு விரைவு பேருந்துகளில் இடங்கள் நிரம்பிவிட்டன. சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகளுக்கு தற்போது 12-ம் தேதிக்கு முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல இதுவரையில் 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் பொங்கல் சிறப்பு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளும், பிற நகரங்களில் வருகிற இருந்தும் சிறப்பு பேருந்துகள் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்களுக்கு இயக்க முடிவு செய்யப்படுகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நாளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடக்கிறது.
பொங்கல் விடுமுறைக்கு பொதுமக்கள் சிரமம் இல்லாமல் சொந்த ஊர்களுக்கு செல்ல விரிவான ஏற்பாடுகளை அரசு போக்குவரத்து கழகங்கள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் வழக்கம் போல 6 சிறப்பு பேருந்து நிலையங்கள் மூலம் பேருந்துகளை இயக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்படுகிறது. பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்த அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது.