தெற்கு ரயில்வேக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருவாரூர் ராமநாதன் நகரை சேர்ந்த மகாலிங்கம் என்ற வழக்கறிஞர், கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி பாமினி விரைவு ரயிலில் திருப்பதியில் இருந்து திருவாரூருக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்த நிலையில், இணையதளம் மூலம் அதனை ரத்து செய்துள்ளார். இதனையடுத்து பயணச்சீட்டு தொகையான 525 ரூபாய் திரும்ப வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்த நிலையில், அது வழங்கப்படாததால் திருவாரூர் ரயில் நிலையத்தில் மகாலிங்கம் விளக்கம் கேட்டுள்ளார்.
ஆனால், ரயில்வே அதிகாரி இணையதளம் வாயிலாக பயணச்சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாலும், 4 தினங்களுக்கு பிறகு ரத்து தொகையை கேட்பதாலும் இங்கு வழங்க இயலாது என கூறியுள்ளனர். இதனையடுத்து, தனது பயண சீட்டு ரத்து தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மகாலிங்கம் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதனை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி, மனுதாரருக்கு பயணச் சீட்டு தொகையான 525 ரூபாயை 9% வட்டியுடனும், வழக்கு செலவுத் தொகைக்காக 10 ஆயிரம் ரூபாய் மற்றும் அபராதமாக 2 லட்சம் ரூபாயை தெற்கு ரயில்வே வழங்க வேண்டும் என அதிரடியாக தீர்ப்பளித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








