வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில், தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக் விலகியதற்கான காரணம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
டி-20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில், ’கருப்பினத்தவர்கள் வாழ்க்கை முக்கியம்’ என்ற இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, கிரிக்கெட் வீரர்கள் போட்டி தொடங்குவதற்கு முன்பாக சில நொடிகள் மண்டியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஒவ்வொரு போட்டித் தொடங்கும் முன்பும் வீரர்கள் அதை செய்து வருகிறார்கள். இந்நிலையில், தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் போட்டி நேற்று நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தப் போட்டியில் இருந்து தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக், திடீரென விலகினார். சொந்த காரணங்களுக்காக அவர் விலகியதாக முதலில் கூறப்பட்டது. தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா கூறும்போது, தனிப்பட்ட காரணங்களுக்காக டிகாக் இப்போட்டியில் பங்கேற்கவில்லை என்றார். ஆனால், கருப்பினத்தவர்களுக்கு ஆதரவாக மண்டியிட மறுத்துதான் அவர் விலகியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கு முன் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடந்த போட்டியின்போதும் டி காக் இவ்வாறு செய்ய மறுத்திருந்தார். இந்நிலையில் இப்போதும் அவர் மண்டியிட மறுத்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரம் சர்ச்சையாகவும் மாறி இருக்கிறது. இதற்கு பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
டி காக் கூறும்போது, ’எனது தனிப்பட்ட சொந்தக் கருத்துக்களை நான் என்னுடனே வைத்துக்கொள்கிறேன். யாரும் யாரையும் இதை செய்யுங்கள் என்று கட்டாயப்படுத்த முடியாது. அப்படித்தான் நான் பல்வேறு விஷயங்களை பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.