கடனை அடைக்க தந்தையிடம் கடத்தல் நாடகம் ஆடிய மகனால் பரபரப்பு!

நண்பர்களிடம் வாங்கிய கடனுக்காக தந்தையிடம் 15 லட்சம் ரூபாய் கேட்டு கடத்தல் நாடகம் ஆடிய மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை, பாளையங்கோட்டை தியாகராஜன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி முத்து மகன் வேல்ராஜ் (29).…

நண்பர்களிடம் வாங்கிய கடனுக்காக தந்தையிடம் 15 லட்சம் ரூபாய் கேட்டு கடத்தல் நாடகம் ஆடிய மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை, பாளையங்கோட்டை தியாகராஜன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி முத்து
மகன் வேல்ராஜ் (29). இவர் தனது தந்தையுடன் சேர்ந்து தச்சு வேலை செய்து
வருகிறார். இவருக்குத் திருமணமாகி மனைவியும், 2 குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில், இரண்டாவது குழந்தை பிறந்ததால் வேல்ராஜின் மனைவி தூத்துக்குடியில் உள்ள பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அவரை பார்ப்பதற்காக நேற்று வேல்ராஜ் தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். பின்னர், இரவில் தனது தந்தையிடம் போன் செய்து சமாதானபுரத்திற்கு வந்து பஸ்ஸில் இறங்குவதாக கூறியுள்ளார். அவரை அழைத்து செல்வதற்காக இசக்கிமுத்து சமாதானபுரத்திற்கு வந்துள்ளார். ஆனால், வெகுநேரம் ஆகியும் வேல்ராஜ் வரவில்லை.

இதையடுத்து இசக்கிமுத்து போன் செய்தபோது, தன்னை ஒரு கும்பல் கடத்தி வைத்துக்கொண்டு ரூ. 15 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதாகத் தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த இசக்கிமுத்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வேல்ராஜ் செல்போனை தொடர்பு கொண்டபோது ஊருடையார்புரம் பகுதியைக் காட்டியது. அங்கு போலீசார் விரைந்து
சென்று பார்த்த போது வேல்ராஜ் உள்பட மூன்று பேர் இருந்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. அதாவது வேல்ராஜ் தனது நண்பர்களிடம் குறைந்த விலைக்கு நகை வருவதாகவும், அதை வாங்கி கொடுத்துவிட்டு கமிஷன் தொகையை பிரித்து கொள்வோம் என்று கூறி ஒரு லட்ச ரூபாய் வாங்கியுள்ளார். அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் வேல்ராஜ் கோவா உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா சென்று பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே பணத்தைக் கொடுத்த நண்பர்கள் திருப்பி கேட்டதால் அவர்களுக்கு பணத்தை கொடுப்பதற்காகவும், உல்லாசமாக ஊர் சுற்றுவதற்கும் முடிவு செய்த வேல்ராஜ் தந்தையிடம் தன்னை ஒரு கும்பல் கடத்திவிட்டதாக நாடகமாடி ரூ. 15 லட்சம் கேட்டது தெரியவந்தது. இது குறித்து அந்த கும்பலிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.