மயிலாடுதுறை அருகே நீடூர் சோமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், நீடூரில் சமயக்குரவர்களால் பாடல் பெற்றதுமான சோமநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் சோழர் கால கட்டடக்கலையின் அடிப்படையில் முழுவதும் கருங்கல்லால் செய்யப்பட்டு நான்கு யுகங்களான இந்திரன், சூரியன் பத்ரகாளியம்மன், நண்டு ஆகியவை பூஜித்ததாக வரலாறு. இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு, ஆறு கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து இன்று காலை யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித கடங்கள், தருமபுர ஆதீன மடாதிபதி, ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி, தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் மங்கள சின்னங்கள் முன்செல்ல புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து சோமநாதசுவாமி மற்றும் வேயுறு தோளியம்மன் உள்ளிட்ட சுவாமிகள் சன்னதிகளில் மகா அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்