பிசிசிஐ-ன் பசுமை விழிப்புணர்வின் படி பிளே ஆஃப் சுற்றுகளில் வீசப்பட்ட டாட் பால்களுக்கு தலா 500 மரக்கன்றுகள் நடப்படும் என அறிவித்திருந்த நிலையில் மொத்தம் எத்தனை டாட் பால்கள் வீசப்பட்டுள்ளன? எவ்வளவு மரக்கன்றுகள் நடப்படுகின்றன என்பதை விரிவாகப் பார்க்கலாம்…
ஒரு மரம் பல கோடி தீக்குச்சிகளை தரும், ஒரு தீக்குச்சி பல கோடி மரங்களை அழிக்கும் என்ற வார்த்தைகளுக்கு இணங்க உலக வெப்பமயமாதல் சுற்றுச்சூழலுக்கு எதிர்மாறாக விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பசுமை விழிப்புணர்வை முன்னெடுத்து உலகெங்கும் உள்ள சுற்றுச்சூழல் அமைப்புகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதனை மையமாக வைத்து உலகின் ஃபேவரிட் ஸ்போர்ட்டான கிரிக்கெட் விளையாட்டு போட்டியின் மூலம் பசுமை விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஒரு லட்சத்து நாற்பத்தி ஐந்தாயிரத்து ஐந்நூறு மரக்கன்றுகள் இந்தியாவில் நடப்படவுள்ளன. உலகின் பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 16 ஆவது சீசன் நடந்து முடிந்துள்ளது. இதன் பிளே ஆஃப் சுற்றிற்கும், பசுமை விழிப்புணர்வுக்கும் பிணைந்த பந்தம் தற்போது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான குவாலிஃபயர் 1 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் இரு அணியினர் தரப்பிலும் போடப்படும் டாட் பால்களின்போது, அவை கிரீன் டாட் பால்களாக கணக்கிடப்பட்டன. குறிப்பாக திரையிடப்படும் போது ஒவ்வொரு டாட் பால்களும் மரம் சின்னத்தை கொண்டும், மைதானத்தின் எல்இடி திரைகளில் கிரீன் டாட் பால்கள் எனவும் விழிப்புணர்வு செய்யப்பட்டன.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐ-ன் பசுமை விழிப்புணர்வாக, நடப்பு ஆண்டு பிளே ஆஃப் சுற்றுகளில் போடப்படும் டாட் பால்கள் ஒவ்வொன்றிற்கும், தலா 500 மரங்கள் நடப்படுவதற்காகவே இந்த முயற்சியாகும். டாடா குழுமத்தின் பசுமை இந்தியாவுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி ரசிகர்கள் தரப்பில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதே சமையம் நடப்பாண்டு ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் எத்தனை டாட் பால்கள் போடப்பட்டுள்ளன, எத்தனை லட்சம் மரங்கள் நடப்படவுள்ளன? என்ற கேள்வி எழலாம்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற குஜராத், சென்னை அணிகளுக்கு இடையேயான குவாலிஃபயர் 1 போட்டியின் போது இரு அணியினரின் இன்னிங்சின் போதும் மொத்தமாக 84 டாட் பால்கள் வீசப்பட்டுள்ளன. ஒவ்வொரு டாட் பந்திற்கும் 500 மரங்கள் எனும் பட்சத்தில் 42,000 மரக்கன்றுகள் நடப்படும்.
இரண்டாவதாக நடைபெற்ற மும்பை, லக்னோ அணிகளுக்கு இடையேயான எலிமினெட்டர் போட்டியின் போது இரு அணிகளின் இன்னிங்ஸின் போதும் 96 டாட் பால்கள் வீசப்பட்டது. எனவே 48,000 மரக்கன்றுகள் நடப்படும். இந்த போட்டியில் மும்பை வீரர் ஆகாஷ் மத்வால் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகள் எடுத்திருந்த நிலையில், அவர் மட்டுமே 17 டாட் பால்களை வீசியுள்ளார்.
அடுத்ததாக குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற குவாலிஃபயர் 2 ஆவது போட்டியில் குஜராத், மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் மொத்தமாக 68 டாட் பால்கள் வீசப்பட்ட நிலையில், அவை 34,000 மரக்கன்றுகளாக கணக்கிடப்பட்டது.
மேலும் அதே மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியின் போது 43 டாட் பால்கள் வீசப்பட்டது. அவை மொத்தமாக 21,500 மரக்கன்றுகளுக்கு சமமாகும்.
இவ்வாறு 4 போட்டிகளில் வீசப்பட்ட டாட் பால்களின் எண்ணிக்கை 291 ஆகும். எனவே 1 பந்திற்கு 500 பால்கள் வீதம், மொத்தம் 1,45,500 மரக்கன்றுகள் பிசிசிஐ தரப்பில் இருந்து, டாடா குழுமத்தின் பசுமை இந்தியா முன்னெடுப்பின் கீழ் நடப்படவுள்ளன.
இது உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் முதற்கொண்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரை பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், தாங்கள் வைக்கும் மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி அதன் வளர்ச்சி வரை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், அனைவரும் பிசிசிஐக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
– நாகராஜன், நியூஸ் 7 தமிழ் ஸ்போர்ட்ஸ்.