தேனி அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்த இருவா், போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
தேனி மாவட்டம் அருகே, கூடலூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை தமிழகத்தில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், கூடலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் பிச்சை பாண்டி தலைமையில் நடவடிக்கை எடுத்த போலீசார், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்தனர்.
அப்போது அந்த வழியே வந்த கேரள மாநில அரசு பஸ்ஸில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பிலான கேரள லாட்டரி சீட்டுகளை தேனி சமதர்மபுரத்தைச் சேர்ந்த சாந்தி மற்றும் சின்னமனூரை சேர்ந்த முத்து ஆகிய இருவரும் விற்பனைக்காக கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர்களிடமிருந்து ரூபாய் இரண்டு லட்சம் மதிப்புள்ள 4500 லாட்டரி சீட்டுகளை கைப்பற்றி இருவரையும் சிறையில் அடைத்தனர்.
கா. ரூபி







