“தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடனான பேச்சுவார்த்தையில் சுமூகம்” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடனான பேச்சுவார்த்தையில் சுமூகம் ஏற்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு தலைவர் பி.சம்பத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  இடையேயான தொகுதி…

தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடனான பேச்சுவார்த்தையில் சுமூகம் ஏற்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு தலைவர் பி.சம்பத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  இடையேயான தொகுதி பங்கீடு குறித்த முதல்கட்ட பேச்சு வார்த்தை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  பேச்சு வார்த்தை குழு, திமுக பேச்சுவார்த்தை குழுவோடு தேர்தல் கூட்டணி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அண்ணா அறிவாலயத்திற்கு இன்று காலை வருகை தந்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து மத்திய குழு தலைவர் பி.சம்பத் ,  பெ.சண்முகம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், என்.குணசேகரன் ஆகியோர் திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.  திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான பேச்சுவார்த்தை குழுவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது. 

5 விருப்ப தொகுதிகளின் பட்டியலை திமுகவிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் 2019 தேர்தலில் கோவை மதுரை ஆகிய தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது. இந்த நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திமுகவிடம் வலியுறுத்தியுள்ளது. 

கோவை, மதுரை, கன்னியாகுமரி, தென்காசி, நாகப்பட்டினம் ஆகிய 5 தொகுதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருப்ப தொகுதிகள் கேட்டுள்ளதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து திமுக -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்ததை தொடர்ந்து  மத்திய குழு உறுப்பினர் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது.. 

” நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் பேச்சு வார்த்தை நடந்தது. பேச்சு வார்த்தை சமூகமான முறையில் அமைந்திருந்தது. ஒவ்வொரு கட்சிகளிலும் கூடுதலான தொகுதிகளை போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்கள். கடந்த முறை போட்டியிட தொகுதிகளை விட கூடுதலான தொகுதிகளை திமுகவிடம் கேட்டிருக்கிறோம் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் கூட்டணி தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு அமைந்தால் அது நல்லது” என தெரிவித்துள்ளார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.