விருமன் படத்தில் இடம் பெற்ற “மதுர வீரன்” பாடல் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி செந்தில் பாடிய நிலையில், தற்போது அதிதி சங்கர் குரலில் பாடல் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொம்பன் படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி ‘விருமன்’ படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை நடிகர் சூர்யா அவரது 2D தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இப்படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா ரசிகர்களின் ஆரவாரத்தோடு மதுரையில் நடைபெற்றது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், யுவன் சங்கர் ராஜா மற்றும் அதிதி சங்கர் இணைந்து பாடியுள்ள “மதுர வீரன்” பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் மூலம் அதிதி சங்கர் பாடகியாகவும் அறிமுகமாகியுள்ளார்.
விருமன் படத்தில் இடம் பெற்ற “மதுர வீரன்” பாடலை முதலில் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி செந்தில் பாடியுள்ளார். பின்னர் அந்த பாடல் அதிதி சங்கர் குரலில் வெளியாகியுள்ளது. இதனால் பலரும் அதிதி சங்கரை விமர்சித்து வந்தனர். இது தொடர்பாக பேசியுள்ள பாடகி ராஜலட்சுமி சினிமாவில் இவ்வாறு நடப்பது சகஜம் தான். ஒரு பாடல் யார் படினால் நன்றாக இருக்கும் என்பதை இயக்குனர் தான் முடிவு செய்ய வேண்டும். அப்படி மதுரை வீரன் பாடலுக்கு அதிதியின் குரல் பொறுத்தமாக இருந்ததால் பாட வைத்துள்ளனர். அவரும் அருமையாக பாடியுள்ளார். சரியான ஆளுக்குதான் வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். இதற்காக அதிதியை விமர்சிப்பது வருத்தமாக உள்ளது” இவ்வாறு பாடகி ராஜலட்சுமி கூறியுள்ளார்.







