கனடாவின் டம்ளர் ரிட்ஜ் பகுதியில் இயங்கி வரும் மேல்நிலைப்பள்ளியில் 7 முதல் 12 ம் வகுப்பு வரை 175 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் இப்பள்ளிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் அலறியடித்து ஓடினார்கள்.
இந்த தாக்குதலில் பலர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பள்ளிக்குள் சென்று தாக்குதல் நடத்தியவரை தேடினர். அப்போது துப்பாக்கிசூட்டில் 9 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. மேலும் 25 பேர் காயம் அடைந்திருந்த நிலையில் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து பள்ளிக்குள் இருந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஊழியர்களை போலீசார் பத்திரமாக வெளியேற்றினர்.
இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அந்த நபர் குறித்த விவரங்களை போலீசார் வெளியிட வில்லை. அதேவேளையில் தாக்குதல் நடத்தியவர் ஒரு பெண் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இத்தாக்குதலில் மற்றொரு நபரும் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.







