31.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் செய்திகள் சினிமா

சிவாஜி கண்ட ‘யார் அந்த நிலவு?’


ஜ. முஹம்மது அலீ

கட்டுரையாளர்

1962-ம் ஆண்டில் இந்தியாவின் நல்லெண்ணத் தூதராக பிரிட்டன், ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சர்வதேச திரைப்பட சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர் ஹாலிவுட் நடிகர்களான மார்லன் பிராண்டோ உள்ளிட்ட நடிகர்களை சந்தித்தார் சிவாஜி கணேசன்.

அந்த காலத்தில் ஆங்கிலேய பாப் பாடகரான கிளிப் ரிச்சர்ட் என்பவர் மிகப் பிரபலம்… அவரது மெல்லிசையில் மயங்கிய நடிகர் திலகம், தானும் அப்படி ஒரு மெல்லிசை பாடலில் நடிக்க வேண்டும் என எண்ணி கொண்டார்…. வெளிநாட்டுப்பயணம் முடிந்து நாடு திரும்பிய நிலையில் ரிச்சர்ட் குறித்து மெல்லிசை மன்னர் விஸ்வநாதனிடம் கூறினார். அதுமட்டுமின்றி “விச்சு என்ன நீ பெரிய மெல்லிசை மன்னர் நீ… ஆங்கில பாப் பாடகர் கிளிப் ரிச்சர்டு மாதிரி உன்னால் மெல்லிசை டியூன் போட முடியுமா என கிண்டலாக கேட்டு செல்லமாய் வம்புக் கிழுத்தார் சிவாஜி… அதற்கு விஸ்வநாதனோ, “என்னால் முடியும், ஆனால் அதற்கு ஏற்ப நீங்க நடிக்கணுமே’ என பதிலடி கொடுக்க… நீ பாட்டு போடு நான் நடிக்கிறேன் என பதிலுக்கு சிவாஜி கூறிவிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சிவாஜி குறிப்பிட்டதை கவியரசு கண்ணதாசனிடம் சொல்லி ‘அண்ணே, நீங்க தான் காப்பாத்தணும்’ என சிவாஜியுடனான தனது சவாலை எடுத்துரைத்தார் மெல்லிசை மன்னர்… அவ்வளவுதான்… கடகடவென தயாரானது தான் சாந்தி திரைப்படத்தில் இடம் பெற்ற ‘யார் அந்த நிலவு’ பாடல்… இந்த பாடலை டி.எம்.எஸ்சை வைத்து பாட வைத்தார் விஸ்வநாதன்.
படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் சிவாஜிக்கு பாட்டை போட்டுக் காண்பித்தார் இயக்குநர். மனம் லயித்துப்போன சிவாஜி, மவுனமாக பாடலைக் கேட்டபின் படப்பிடிப்பை 2 நாள் தள்ளிப்போடச் சொன்னார்… 2 நாள், 4 நாட்கள் ஆனது… தொடர்ந்து படப்பிடிப்பை தள்ளிப் போட்டுக் கொண்டே செல்ல, கவலை அடைந்த இயக்குநர் பீம்சிங், “பாட்டு பிடிக்கலையா? வேற டியூன் போடச் சொல்லவா.. எனக் கேட்டும் பார்த்தார்.

சிவாஜி சிரித்துக் கொண்டே, “விசுவை நான் சீண்டிவிட்டதில் கண்ணதாசனின் அற்புதமான வார்த்தைகளுக்கு டி.எம்.எஸ். பிரமாதமா பாடியிருக்கிறார். இந்த மூன்றையும் தூக்கி அடிக்கிற மாதிரி நான் நடிக்கணும். அதுக்கு எனக்கு டயம் வேண்டும்’ என்று கூறினார். அதன்படியே சிகரெட் புகைத்தபடி, பாடல் காட்சியை ஊதித் தள்ளி விட்டார் சிவாஜி…

அமெரிக்க பயணத்தின் போது, ‘சிவாஜி என்னைப்போல் நடிக்க முடியும், ஆனால், அவரைப் போல் என்னால் நடிக்க முடியாது’ என அந்தக்கால ஹாலிவுட் பிரபலமான மார்லன் பிராண்டோ குறிப்பிட்டது ஏன் என தெரிகிறதா?. சிவாஜியின் திரைப்பயணத்தில் இதுவும் ஒரு மறக்க முடியாத நிகழ்வு…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading