மாற்றுத்திறனாளிகளுக்கு தனி நிதியம் அமைத்துத்தர வேண்டும் என சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய உதயநிதி ஸ்டாலின், தள்ளாத வயதிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. மாற்றுத்திறனாளிகளும் இயற்கையை ரசிக்க வேண்டும் என்பதற்காக, சென்னை மெரினா கடற்கரையில் தற்காலிக நடைபாதையை அமைத்தது போல், கடற்கரைகள் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
மேலும், 40 சதவீதத்திற்கு மேல் உடல் குறைபாடு உடையவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என வலியுறுத்திய உதயநிதி, மாற்றுத்திறனாளிகளுக்கு முழு நேர ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அதோடு, மாற்றுத்திறனாளிகளுக்கு தனி நிதியம் அமைத்துத்தர வேண்டும், மாவட்டந்தோறும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகள் மேலாண்மை என்ற படிப்பைத் தொடங்க வேண்டும், மாற்றுத்திறனாளி ஆணையத்திற்கு, தனியாக மாற்றுத்திறனாளி நபரை ஆணையராக நியமிக்க வேண்டும் என தனது கோரிக்கையை தெரிவி்த்தார்
இதற்கு பதிலளித்த பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் விடுத்துள்ள அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும், மாற்றுத்திறனாளிகளின் நல ஆணையத்திற்கு தாமே நேரடியாக சென்று சம்பந்தப்பட்ட அமைப்புகளின் நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன், இனிவரும் காலங்களில் செய்ய வேண்டிய திட்டங்கள் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்தார்.








