ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.
இந்தியாவின் கோடைகால விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. யாரும் எதிர்பாராத வகையில் முதல் முறையாக களம்கண்ட குஜராத் அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடரின் தொடக்கத்தில் குஜராத் அணி தேர்வு குறித்தும், கேப்டன் ஹர்திக் பாண்டியா குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. குறிப்பாக ஹர்திக் பாண்டியாவின் கேப்டன் திறன் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.
2021ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டம், காயம் காரணமாக பந்து வீச முடியாமல் போனது, இந்திய அணியில் இடம் கிடைக்காதது என கடந்த இரண்டு ஆண்டுகள் ஹர்திக் பாண்டியாவிற்கு சோதனை காலமாக அமைந்தது.
இவை அனைத்தையும் தாண்டி தமக்கு அளிக்கப்பட்ட கேப்டன் பொறுப்பை திறம்பட செய்து தம் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் அளித்தது மட்டுமின்றி அணிக்கு கோப்பையையும் கைப்பற்றி தந்துள்ளார்.
2015ம் ஆண்டு மும்பை அணியால் அடிப்படை தொகையான 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட பாண்டியா ஐபிஎல் தொடரின் ஆக சிறந்த ஆல்ரவுண்டராக வலம் வந்தார். 5 கோப்பைகளை கைப்பற்றிய மும்பை அணியின் வெற்றிக்கு காரணமான வீரர்களில் முக்கியமானவர் பாண்டியா.
2022ம் ஆண்டு ஏலத்தில் வேறு வழியின்றி பாண்டியாவை குஜராத்திற்கு தாரை வார்த்தது மும்பை அணி. கேப்டனாக முதல் வருடம், பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இல்லாத அணி இவற்றை கொண்டே பல அணிகள் நெருங்க முடியாத உயரத்தை தொட்டுள்ளார் பாண்டியா.
ஹர்திக் பாண்டியாவின் ஆட்டத்தால் ஈர்க்கப்பட்ட முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கர் அவரை இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் ஒப்பிட்டு பேசி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். களத்தில் தோனி போன்று பாண்டியா செயல்படுவதாக சஞ்சய் மஞ்ரேக்கர் பாராட்டியுள்ளார். இருபது ஓவர் உலக கோப்பை நெருங்கி வரும் நிலையில் இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டரான பாண்டியா பழைய பார்ம்க்கு திரும்பி இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது