திருமண சச்சரவுகளைக் காரணம் காட்டி பெண்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த 77 மற்றும் 79 வயதான மூத்த குடிமக்கள் தீர்ப்பாயத்தை அணுகினர். அதில், தனது மகன் மற்றும் மருமகள் தங்களைப் பராமரிப்பதில்லை. எனவே, தங்களுடைய வீட்டில் இருந்து மகன் மற்றும் மருமகள் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, மாதம்தோறும் ரூ. 25,000 வழங்கவும், வீட்டிலிருந்து மகன் மற்றும் மருமகள் வெளியேற வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மருமகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் அஜய் ரஷ்தோகி மற்றும் பி.வி.நாகரத்னா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், திருமண சச்சரவுகளைக் காரணம் காட்டி பெண்களை வீட்டை விட்டு வெளியேற்றக் கூடாது. இதுபோன்ற செயல்பாடுகள் குடும்ப அமைப்பில் விரிசலை ஏற்படுத்தும். ஒரு பெண்ணுக்கு, புகுந்த வீடு மற்றும் பிறந்த வீட்டில் வசிப்பதற்கான அனைத்து உரிமைகளும் உள்ளன. மருமகள் முறையாக நடந்துகொள்ள வேண்டும், மூத்த குடிமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என நீதிமன்றம் எச்சரிக்குமே தவிர வீட்டைவிட்டு வெளியேற்றும் முடிவை ஆதரிக்காது என தீர்ப்பளித்துள்ளது.








