சென்னையில் உள்ள பிரபல தனியார் பிரியாணி கடையில் இருந்து தரமற்ற இறைச்சிகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் பிரியாணி கடைக்காக தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் இருந்து குளிர்சாதன வசதி உள்ள வாகனத்தில் ஆட்டு இறைச்சி கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் கெட்டுப்போன இறைச்சிகள் இருந்ததாக பிரியாணி கடை உரிமையாளர் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் அளித்தார்.
ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கப்பட்ட இறைச்சிகள் தரமற்றதாக இருந்ததை அடுத்து தனியார் பிரியாணி கடையின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த இறைச்சிகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதில் சிக்கன் 1200 கிலோவும், 2400 கிலோ மட்டனும் ஆய்வு செய்தனர். இதையடுத்து தரமற்ற நிலையில், கெட்டுபோன 3.5 டன் இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ், தனியார் பிரியாணி கடை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் இறைச்சிகள் அனைத்தையுமே கைப்பற்றி விட்டோம். கெட்டுப்போன இறைச்சி குறித்து தெரிந்துகொள்ள கால்நடை மருத்துவமனைக்கு மாதிரிகளை அனுப்பி வைக்க உள்ளோம். ஆன்லைனில் ஆர்டர் பெற்று டெலிவரி செய்த நிறுவனம் தான் இதற்கு பதில் கூற வேண்டும். தொடர்ந்து கர்நாடகாவில் எந்த இடத்தில் இந்த இறைச்சி வெட்டப்பட்டது, எந்த நிறுவனம் மூலம் பெறப்பட்டது போன்ற முழு விசாரணையை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.








